வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் கடந்து சென்றபின் மொட்டையாகிப் போன பயிர்ப் பரப்பென சமயங்களில் மாறிப் போகிறது வாழ்க்கை... அதனாலென்ன மறுபடியும் முளைக்காமலா போய்விடும் பயிர்கள்...
வளையத் தொடங்குகிறேன்... வளைந்த பின்னும் உடையவில்லை... கிடைத்த இடங்களில் பற்றிப் படர்கிறேன்... என்னிலும் வேர்களும் இலைகளும் பூக்களும் கனிகளும் இருக்கின்றன... ஆனாலும் என் கனவுகளில் இருந்து மட்டும் கலையவேயில்லை அந்தப் பெருமரம்...
நெடுவானின் கீழ் தொலைவுகளை இறக்கைகளால் அளக்கும் பறவையொன்று இரவில் கூடடைவதுபோல எங்கெங்கோ சுற்றிச் சுழன்றாலும் இறுதியில் உன்னிடமே ஒடுங்குகின்றன நினைவுகள்...
கடும் வெயிலுக்குப் பிறகான அந்தியில் பொழிவதுபோல கூடிய பின் தூறிக் கலையும் மேகங்கள் விட்டுச்செல்லும் புழுக்கமான இரவைப் போல சமயங்களில் மாறிப்போகிறது வாழ்க்கை...
காய்ந்த கனகாம்பரச் செடியில் நீர் பட்டதும் பட்டென வெடிக்கும் விதைகள்போல இரவு தொட்டதும் வெடிக்கும் உன் நினைவுகள்... சிதறும் கனவுகள் ஒவ்வொன்றிலும் கொத்துக்கொத்தாக உன் நினைவுகள்...
இரவுகளின் மறுபக்கத்தில் மறைந்திருக்கும் பகல்கள் போல துன்பங்களின் பின்னால் ஒளிந்திருக்கின்றன இன்பங்கள்... இந்த மேகங்கள் என்ன செய்யுமென்று தெரியவில்லை...
என்னை நீ என்ன செய்கிறாய்... இதயத்தை எடுத்துக்கொண்டாய் இருவிழிகளிலும் உனை வரைந்தாய் செவிகளிரண்டிலும் உன்பெயரை மட்டும் ஒலிக்கச்செய்தாய் சிந்தையில் உனைமட்டுமே செதுக்கிவிட்டாய்... இன்னுமென்ன மிச்சமிருக்கிறது...
பெருந்தோகையிலிருந்து பீலிகள் உதிர்க்கும் மயிலென நீ விட்டுச்செல்லும் நினைவுகளை என் நினைவுகளின் பக்கங்களுக்கு இடையே சேமிக்கிறேன் பத்திரமாக... என் நினைவடுக்குகளைப் புரட்டும் உறக்கத்தின் கைகளெங்கும் கனவுகளின் வண்ணங்கள்...
அகல் விளக்கு ஏந்தி வரும் அணங்கென உன் நினைவுகள் ஏந்தி நடக்கும் கனவுகள் காலிடறி என் உறக்கத்தில் உருண்டுவிழ தீப்பற்றிக்கொண்டு திண்டாடுகிறது உறக்கம்... எரிகின்றன விழிகள்...
இரு கைகள் விரிக்கிறேன் இறக்கைகளென... முகில் நோக்கி முகம் தூக்குகிறேன் நிலமென... முத்து முத்தாக மொத்தமாய் பெய்கிறாய்... இப்போது பறக்கிறேன் நின்றபடியே...