திரும்ப இயலா பயணம் தொடங்கும்முன் நினைவுகளை திரும்பிப் பார்க்கும்போது திரும்பிச் செல்லத் தோன்றும் கணங்களெல்லாம் உன்னை மட்டுமே சுமந்து கொண்டிருக்கின்றன...
உறங்கும்போது காணுகின்ற கனவுகளில் பல விழிக்கும் முன்பே விழிகளுக்குள் கரைந்துவிட உன்னை சுமந்து வரும் கனவுகள் மட்டும் நினைவுகளுக்குள் ஒட்டிக் கொள்வதுதான் எப்படியென்றே விளங்கவில்லை...
தேன் நிரம்பிய குடுவையில் விழுந்துவிட்ட தனித்த எறும்பென ஆகிறேன் நான் உன் நினைவுகளில் விழும்போது... திகட்டும்வரை பருகியபின் மூழ்கும்போதும் இனிப்பைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை...
பகலில் இருந்து நழுவிய பொழுதுகள் இரவில் விழுந்த பின் பழகிய ஒளிக்கு வழிதேட என்னிடமிருக்கும் உன் நினைவுகளில் கொஞ்சம் இரவல் தருவதைத் தவிர நானென்ன செய்ய இயலும்...
எனது பகல்களை கொய்து உன் கூந்தலில் சூடிக்கொள்கிறாய்... எனது இரவுகளை எடுத்து உன் விழிகளுக்கு பூசிக்கொள்கிறாய்... இப்படியிருக்க நாட்கள் என்னை எப்படி கடக்கும்...
அடைமழை பொழியும் இரவில் அனைத்தும் உறையும் குளிரில் அடுப்படி மூலையில் சுருண்டு கிடக்கும் பூனை போலவே உன் நினைவும்... ஒடுங்கி இருந்தாலும் உயிர்ப்புடனே இருக்கிறது...
கருப்பும் வெள்ளையும் தவிர ஏனைய நிறங்கள் எல்லாம் காணாமல்போன கனவொன்றில் என் காதருகில் நீ சொல்லியதாகத் தோன்றிய சொற்களை அதன்பிறகு எப்போது கேட்டாலும் எல்லா நிறங்களும் என்மேல் ஒட்டிக்கொள்வதொன்றும் எதேச்சையானதல்ல...
விடாது பொழியும் அடைமழையைத் தொடர்ந்து சரியும் நிலம்போல சடசடவென என்மேல் சரியும் உன் நினைவுகளில் சிக்கிக்கொண்டபின் உன் நினைவுகளைத்தவிர வேறென்ன நான் சுவாசிக்க முடியும்...
நூலறுந்த பட்டத்தின் பின்னால் ஓடும் அறியாப் பிள்ளைபோல நானும் ஓடுகிறேன் உன் பின்னால்... கையிலிருக்கும் நூல்கண்டாக உன் நினைவுகளுடன்... பெருங்காற்றென சுழன்றடிக்கிறது காலம்...