வலை பின்னிய பிறகு அமைதியாக அமர்ந்திருக்கும் சிலந்தியைப்போல இரவை நெய்துவிட்டு காத்திருக்கிறது உன் நினைவு... சிறுபூச்சியென விழுகின்ற என் உறக்கத்திற்கு...
குறை சொல்லியும் குற்றம் சுமத்தியும் சொற்களால் குத்துபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்... மரங்கள் மீது கரிப்புகை கக்கிச் செல்லும் நெடுஞ்சாலை வண்டிகளைப் போல... பூக்காமலா போய்விட்டன மரங்கள்...
இரவு மட்டுமேன் இப்படி இருக்கிறது..? நொடிகள் ஒவ்வொன்றும் உன் நினைவுகளை சுமந்து வந்து உள்ளத்தில் கொட்டிச் செல்ல சுமை தாங்கா உறக்கம் கனவுகளை அள்ளி இறைக்கிறது...
நெருப்பிலிட்டால் பொன்னாவான் நீரிலிட்டால் மீனாவான் விண்ணிலெறிந்தால் பறவையாவான் மண்ணில் புதைத்தால் மரமாவான் காற்றில் கலந்தால் புயலாவான் மேற்கறியா சூரியன் அவன் தோற்றம் மட்டுமே அவனுக்குண்டு...