என் உறக்கத்திற்குள் ஓடுகின்ற உன் நினைவுகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன காற்றிலாடும் காய்ந்த மூங்கில்களைப்போல... பறக்கும் தீப்பொறிக் கனவுகளில் ஒளிர்கிறது என் இரவு...
அரும்புகளின் மேல் அதிகாலை அமர்ந்திருக்கும் பனித்துளிபோல் அழகாகவே தொடங்குகின்றன எல்லாமே... என்ன செய்வது காயும் வெயிலின் கடிவாளமொன்றும் பனித்துளியிடம் இல்லையே...
கனவுகளின் வெளியில் காட்சிகளாக உன் நினைவுகள்... உன் நினைவுகளின் வெளியெங்கும் நீக்கமற நான்... என்னை நான் பார்க்கும் கனவுகளில் நீ மட்டுமே தெரிய என்னோடு சேர்ந்து குழம்புகிறது இரவு...
நீ என்னிடம் ஏதும் சொல்வதுமில்லை... நான் உன்னிடம் ஏதும் கேட்பதுமில்லை... உன் நினைவுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் நானிருக்கிறேன்... என் நினைவுகளின் நீள்வெட்டுத் தோற்றத்தில் நீயிருக்கிறாய்... பொருளற்றுப் போகின்றன கேள்விகளும் பதில்களும்...
வெயிலெனக் காயும் உன் நினைவுகள்... நிழலெனத் தொடரும் கனவுகள்... மழையெனப் பொழியும் உன் நினைவுகள்... வெள்ளமெனப் பெருகும் கனவுகள்... வெப்பமும் ஈரமும் விரவிக் கிடக்கும் என் இரவுகள்...
ஏழு மலைகள் தாண்டி ஏழு கடல்களுக்கு அப்பால் ஒரு கிளியின் இதயத்தில் இருக்கிறது என் உயிர்... ஏழு மலைகளும் ஏழு கடல்களும் உன் இருவிழிகளுக்குள் இருக்கிறதென்பதை நான் மட்டுமே அறிவேன்...
கடும் கோடையில் காலைமுதல் காய்ந்த பாறை எற்பாடு தொடக்கத்தில் தகிப்பதுபோல உன் நினைவுகளின் வெப்பத்தில் சுடுகிறது இந்த இரவு... கடந்துவிட முயற்சிக்கிறேன் நெடுந்தூரம் நீள்கிறது பாறையும் இரவும்...
சிகரத்திலிருந்து விழுகிறேன் அமைதியாக... கைகள் பிடிமானம் தேடி பரிதவிக்கவில்லை... கால்கள் ஊன்றுமிடம் தேடி அலைபாயவில்லை... அமைதியாகவே விழுகிறேன்... சிகரமே தள்ளிவிட்ட பின் விழுவதைத் தவிர வேறென்ன செய்வது...