அது ஒரு அந்திப் பொழுது... ஒரு கோப்பைத் தேநீரில் ஒரு மிடறு விழுங்கினேன்... தொண்டைக் குழியை கடந்தது கரைந்த காடு... இரைப்பைக்குள் நிலைகொள்ள இயலாமல் தவித்தது கடந்தகால காடு... இறந்த காட்டில் இருந்த உயிர்களின் கூக்குரல் செவிப்பறைகள் கிழித்து வெளியேறியது... எரியும் தாவரங்களின் அடர்புகையால் நுரையீரல்கள் நிரம்பி நாசித்துளைகள் புகைக்கூண்டுகளாயின... பெருமரத்தின் நெடுங்கிளைகள் தப்பி நீண்டது வாயின் வழியே... அடர்வனத்தின் ஆழத்திலிருந்து கடைசியாய் வந்தது உயிர்க்காற்று நிலைகுத்திய கண்களின் வழியே... இப்போதெல்லாம் தேநீர்க் கோப்பைகளை நான் தொடுவதேயில்லை...