Posts

Showing posts from 2020

காத்திருக்கிறது...

 வலை பின்னிய பிறகு அமைதியாக அமர்ந்திருக்கும் சிலந்தியைப்போல இரவை நெய்துவிட்டு காத்திருக்கிறது உன் நினைவு... சிறுபூச்சியென விழுகின்ற என் உறக்கத்திற்கு...

உன் நினைவுகள்...

 பஞ்சுப் பொதியென சுமைகள் களைந்துவிட்டு தூங்கவே எத்தனிக்கிறேன்... நெருப்புப் பொறிகளென விழுகின்றன உன் நினைவுகள்...

உச்சிக்கு வரும்போது

 உதிக்கும்போது ரசிப்பவர்கள் உச்சிக்கு வரும்போது விரும்புவதில்லை... ஞாயிறை மட்டுமல்ல...

உலர்த்தத்தான் ஒருவழியுமில்லை...

 உன் நினைவுகளெனும் கரைகளில்லாப் பேராழியில் விழுந்துவிட்ட பிறகு முழுகும்போதும் மேலெழும்போதும் கனவுகளில் நனைகிறேன்... உலர்த்தத்தான் ஒருவழியுமில்லை...

உலவுகிறேன் வழக்கம்போல...

 கனவுகளின் வெளியில் காற்றென நீயே நிறைகிறாய்... உன்னை சுவாசித்தபடியே உலவுகிறேன் வழக்கம்போல...

சிதறுகின்றன கனவுகள்...

 தடதடவெனத் தலையில் விழும் அருவியைப்போல கொட்டுகின்றன உன் நினைவுகள் என் இரவுகளில்... தெறிக்கும் துளிகளென சிதறுகின்றன கனவுகள்...

தீர்வுகள் இருப்பது தெரியாமலேயே...

கனத்த இருளை இழுத்துப் போர்த்தும் இரவைப்போல கவலைகளைப் போர்த்துகிறது வாழ்க்கை... மூடிய இருளை முட்டித் திறக்கும் விடியலைப்போல தீர்வுகள் இருப்பது தெரியாமலேயே...

உள்ளிறங்குகிறாய் நீ...

எப்போதும் உன் நினைவுகளில் ஊறிக்கொண்டே இருக்கிறேன் நான்... தேனிலூறும் நெல்லிக்கனியென... மெல்ல உள்ளிறங்குகிறாய் நீ...

இருவருமே...

எனக்குத் தெரியும் நீ என்னைத் தேடுகிறாய்... உனக்குத் தெரியும் நான் உன்னில் தொலைகிறேன்... இருந்தபோதும் விளையாடுகிறோம் இருவருமே...

பூக்காமலா போய்விட்டன

குறை சொல்லியும் குற்றம் சுமத்தியும் சொற்களால் குத்துபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்... மரங்கள் மீது கரிப்புகை கக்கிச் செல்லும் நெடுஞ்சாலை வண்டிகளைப் போல... பூக்காமலா போய்விட்டன மரங்கள்...

வடி கட்டுகிறது வாழ்க்கை...

 நாளிலிருந்து வழிந்து கரைகிறது இரவும் பகலும்... கவலைகளை மட்டும் வடி கட்டுகிறது வாழ்க்கை...

வருத்திவிடுமா...

 நீ சொற்களால் சுடுகிறாய்... பார்வைகளில் பனி பெய்கிறாய்... ஆனாலுமென்ன வெப்பமும் குளிரும் உன் இதயம் கடந்து வந்தென்னை வருத்திவிடுமா...

மறைவதில்லை...

 என் இரவுகளின் மேல் நீ நடக்க உன் நினைவுகள் கம்பளம் விரிக்கின்றன... கால் தடமெனப் பதியும் கனவுகள் கண்கள் திறந்தபின்னும் மறைவதில்லை...

தெரிவதேயில்லை...

 பரந்த வெளியெங்கும் நிறைந்திருக்கும் உடுக்களெல்லாம் ஒளியோடு மின்னுவதாகவே எண்ணுகின்ற கண்களுக்கு அவை தகிப்பது தெரிவதேயில்லை...

உனக்கெப்படி புரிய வைப்பது...

 உன் நினைவுகளுக்குள் நானில்லையென உனக்கு நீயே சொல்லிக் கொள்கிறாய்... உனக்கெப்படி புரிய வைப்பது என் நினைவுகளுக்குள்தான் நீயிருக்கிறாயென...

யுகங்களை எண்ணிக்கொண்டு...

 விடியாமல் நீளும் இரவொன்றைக் கடக்க நான் நொடிகளை எண்ணுகிறேன்... நொடிகளோ யுகங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றன...

நினைவுகளைத் துரத்துகிறது...

 தப்பியோடும் சிறுமுயலை விடாமல் துரத்தி கவ்வி வரும் வேட்டைநாயென உன் நினைவுகளைத் துரத்துகிறது இந்த இரவு...

மேகங்கள் நனைவதில்லை...

 நிலத்தின் தாகம் உணராமல் நீங்கும் மேகங்கள் நனைவதில்லை பெருமழை சுமந்தபோதும்...

தேங்குகிறது இரவு...

 கொழுகொம்பாக நான்... கொடியாகப் படரும் உன் நினைவுகள்... பூக்கும் கனவுகளில் தேங்குகிறது இரவு...

நடுங்குவதில்லை நிலம்...

 குளிர் சுமக்கும் காற்றின் ஊடாக குதிக்கும் தூறல்கள் குளிர் பூசிக்கொண்டாலும் நடுங்குவதில்லை நிலம்...

புதிதாகப் பிறக்கின்றன...

 உனக்கும் எனக்குமான இடைவெளிகள் இல்லாமல் போகும்போது புதிதாகப் பிறக்கின்றன வானும் மண்ணும்...

முன்னும் பின்னும்...

 புயலுக்கும் முன்னும் பின்னும் சலனமின்றியே இருக்கின்றது வானும் மண்ணும்...

தோற்பதென்னவோ...

 இரவுக் கயிற்றின் இருபுறமும் நின்று இழுக்கும் உன் நினைவுகளில் எந்தப் பக்கம் வென்றாலும் தோற்பதென்னவோ உறக்கம்தான்...

தூறவே செய்கிறது...

 வாடிய செடியின் வேருக்கு அருகில் விழுகின்ற நீர்த்துளி போல வாய்ப்புகளை தூறவே செய்கிறது வாழ்க்கை...

இரவு மட்டுமேன்...

 இரவு மட்டுமேன் இப்படி இருக்கிறது..? நொடிகள் ஒவ்வொன்றும் உன் நினைவுகளை சுமந்து வந்து உள்ளத்தில் கொட்டிச் செல்ல சுமை தாங்கா உறக்கம் கனவுகளை அள்ளி இறைக்கிறது...

தோற்றம் மட்டுமே அவனுக்குண்டு...

 நெருப்பிலிட்டால் பொன்னாவான் நீரிலிட்டால் மீனாவான் விண்ணிலெறிந்தால் பறவையாவான் மண்ணில் புதைத்தால் மரமாவான் காற்றில் கலந்தால் புயலாவான் மேற்கறியா சூரியன் அவன் தோற்றம் மட்டுமே அவனுக்குண்டு...

வேறென்ன தெரியும்..

 நீ கண்களுக்கு இடும் மையிலிருந்து எழும் என் இரவுகளின் கனவுகளுக்கு உன் கண்களைத் தவிர வேறென்ன தெரியும்...

விடியலுக்குக் காத்திருக்கிறது...

 கருமேகங்களுடன் சண்டையிடும் கடுங்காற்றின் சுழலுக்குள் சிக்கிக்கொண்ட இரவொன்று விடியலுக்குக் காத்திருக்கிறது...

வழிகின்றன கனவுகளாக...

 ஓவியனின் தூரிகையில் ஒட்டிக்கொண்ட வண்ணங்கள் ஓவியமாக வழிவதுபோல நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட உன் நினைவுகள் வழிகின்றன கனவுகளாக...

நினைப்பதேயில்லை...

 கொடுங்காற்று கொண்டுவரும் மேகங்கள் கொட்டித் தீர்க்கும் கனமழை நிலம் தாங்குமாவென நினைப்பதேயில்லை...

கவனத்தில் கொள்கிறாயா என்ன...

 உன் நினைவுகளில் நானிருப்பதை நினைக்காதது போலவே நீயிருக்கிறாய்... காற்றிருப்பதை ஒவ்வொரு கணமும் கவனத்தில் கொள்கிறாயா என்ன...

சேர்த்தே சுமக்கும்...

 துடுப்புகள் திசைமாற்றித் தள்ளும்போது மாறும் பாதையில் பயணிக்கும் படகு கரை சேரவில்லையெனில் பழியையும் சேர்த்தே சுமக்கும்...

முயற்சிக்கிறேன்...

 நீ புன்னகைத்த பொழுதுகளை எடுத்து நீ இல்லாத இரவுகளில் நிரப்பியபின்னும் மிச்சமிருக்கும் இரவை உறக்கத்தால் நிரப்ப முயற்சிக்கிறேன்...

சுற்றம்...

 ஆற்று மீனெடுத்து ஆழிநீரில் சேர்த்துவிட்டு துடிப்பதை நடிப்பென்றே சொல்லுகிறது சுற்றம்...

என்ன செய்வது...

 உன் நினைவுகளின் விரல்களைப் பிடித்தபடியே உறக்கத்தின் ஊடாக இரவைக் கடக்க எண்ணுகிறேன்... இடையிடையே நிறுத்தி கதைபேசும் கனவுகளை என்ன செய்வது...

செக்குமாடுகள்...

 நெடுநேரம் நடப்பதிலொன்றும் குறைவில்லை... ஆனாலும் வட்டத்தைத் தாண்டுவதில்லை செக்குமாடுகள்...

என்ன செய்யப் போகிறதோ...

 கொழுத்த தவளையென என் உறக்கம் கனைக்கிறது... என்ன செய்யப் போகிறதோ உன் நினைவுப் பாம்பு...

கரை திரும்புவதில்லை

 கலங்கள் மிதக்கின்றனவென ஒதுங்கிப் போவதில்லை அலைகள்... அலைகள் தடைகளென கரை திரும்புவதில்லை கலங்கள்...

கிறங்குகிறேன்...

 இரவுப் பொழுதில் இதயம் வருடும் இளையராஜாவின் இசை போலவே உன் நினைவுகளும்... முன்னதில் உறங்குகிறேன் பின்னதில் கிறங்குகிறேன்...

நகர்கிறது வாழ்க்கை...

 உழுவையென உறும நினைக்கும் வேளையில் உடைந்த பல்லை நினைவூட்டி நகர்கிறது வாழ்க்கை...

அதிர்கிறது...

தொலைவில் தொடர்வண்டி வரும்போதே தடதடக்கும் தண்டவாளமென உன் நினைவுகள் என்னைக் கடக்கும் முன்னரே கனவுகளால் அதிர்கிறது இரவு... 

சோர்ந்து போவதில்லை...

 நீண்ட நதிகள் கடல் சேரும்போதும் சோர்ந்து போவதில்லை தண்ணீர்..

நகர முடியாமல்....

 நீ அருகில் இருக்கும் போது காலில் சக்கரம் கட்டும் காலம் ஏனோ நீ தொலைவில் இருக்கும் போது சோர்ந்து போகிறது நகர முடியாமல்....

அறியாமலேயே...

 நீ சொற்களை விழுங்கிவிட்டு மௌனம் நிரப்புகிறாய் நமக்கிடையே... அந்த மௌனம் சொற்களால் நிரம்பிக் கிடப்பதை அறியாமலேயே...

மெய்யுணர்ந்தேன்...

 மெய்யான மெய்யெதுவென மெய்யாகத் தேடினேன்... மெய்யே மெய்யில்லையென மெய்யுணர்ந்தேன்...

என்னை எப்படி...

 என்னிலிருந்து ஏனோ உன்னை தள்ளி வைக்கிறாய்... இருக்கட்டும் பரவாயில்லை... உன்னிலிருந்து என்னை எப்படி தள்ளி வைப்பாய்...

நம்பவில்லை என்றாலும்கூட...

 காட்சிப்புலத்திற்கு அப்பாலும் காட்சிகள் இருக்கின்றன... கண்கள் நம்பவில்லை என்றாலும்கூட...

என் உறக்கமெங்கும்...

 நீள இரவின் கருமைக்குள் உன் நினைவுகளைப் பூசிச்செல்கிறாய்... என் உறக்கத்தில் அவை ஒட்டிக்கொண்ட பின் திட்டுத்திட்டாக கனவுகள் என் உறக்கமெங்கும்...

மறுபடியும்...

 வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் கடந்து சென்றபின் மொட்டையாகிப் போன பயிர்ப் பரப்பென சமயங்களில் மாறிப் போகிறது வாழ்க்கை... அதனாலென்ன மறுபடியும் முளைக்காமலா போய்விடும் பயிர்கள்...

நகர்வதேயில்லை...

 நீ நடந்த தடங்களில் நிரம்பும் மணல் துகள்களுக்கு மனதில் மலையென்று நினைப்பு... இடத்தைவிட்டு நகர்வதேயில்லை...

சிதறுவது போல

 சேர்த்து வைத்த சில்லறைகள் மண் உண்டியல் உடையும் போது சிதறுவது போல கனவுகள் மாறிப் போன பின்னும் கூட நீளவே செய்கிறது வாழ்க்கை...

நனைந்தபின்னும் காய்கிறேன்...

 ஒற்றைக் கருமேகம் கொட்டிச் செல்லும் கோடி தூறல்களென நீ தெளித்துச் செல்லும் நினைவுகளில் மொத்தமாக நனைந்தபின்னும் காய்கிறேன்...

நம்பிக்கையால்...

 இலையுதிர் காலத்தின் இறுதியில் மொத்த இலைகளும் உதிர்ந்த மரத்தில் துளிர்க்கும் ஒற்றை இலை மரத்தை நிறைக்கிறது நம்பிக்கையால்...

உன்னைப் போல...

 உள்ளங்கை ரேகைகள் ஒருபோதும் உருமாறுவதில்லை நினைவுகளில் ரேகைகளாய் படர்ந்திருக்கும் உன்னைப் போல...

உன்னைப் பூசுகிறது...

 உன் நினைவுகளின் மீது நிறங்கள் பூசுகிறது இரவு... என் கனவுகளில் வண்ணங்களாக உன்னைப் பூசுகிறது நினைவு...

அடங்கிய பிறகு...

 கல்லெறியக் கலங்கிய குட்டை தெளிகிறது... அலைகள் அடங்கிய பிறகு...

உன்னில் குவிகின்றன...

 செதுக்கிய சிலையில் கண் திறக்கும் கல்தச்சன் கவனமெல்லாம் உளியின் மேல் குவிவதுபோல உன்னில் குவிகின்றன என் நினைவுகள்...

அந்தப் பெருமரம்...

 வளையத் தொடங்குகிறேன்... வளைந்த பின்னும் உடையவில்லை... கிடைத்த இடங்களில் பற்றிப் படர்கிறேன்... என்னிலும் வேர்களும் இலைகளும் பூக்களும் கனிகளும் இருக்கின்றன... ஆனாலும் என் கனவுகளில் இருந்து மட்டும் கலையவேயில்லை அந்தப் பெருமரம்...

மறந்தே போகிறது...

 குடிக்கத் தொடங்கி கொஞ்ச நேரத்தில் குவளைகளின் கணக்கு மறந்து போவதுபோல உன் நினைவுகளில் மூழ்கத் தொடங்கியதும் மறந்தே போகிறது ஆழம்...

வெளிவரக் காத்திருக்கிறேன்...

 விடியலுக்கு முன்னரே வெளுக்கும் வானமென்று சொல்லியது இரவு... ஒளிக்கீற்றுகள் வெளிவரக் காத்திருக்கிறேன்... விடியும்...

விளங்கவேயில்லை...

 எனக்குள் இருக்கும் நானெடுத்து வெளியில் நிறுத்திய பின் நான் என்னைப் பார்க்கும்போது எனக்குள் நிரம்பியிருப்பது என்னவென்றுதான் விளங்கவேயில்லை...

இறுதியில் உன்னிடமே...

 நெடுவானின் கீழ் தொலைவுகளை இறக்கைகளால் அளக்கும் பறவையொன்று இரவில் கூடடைவதுபோல எங்கெங்கோ சுற்றிச் சுழன்றாலும் இறுதியில் உன்னிடமே ஒடுங்குகின்றன நினைவுகள்...

பந்தயத்தில் இழுத்துவிடுகிறது...

 காட்டுப்புரவி கடிவாளம் வெறுப்பதுபோல துயர்களை வெறுக்கிறேன் நான்... பந்தயத்தில் இழுத்துவிடுகிறது வாழ்க்கை...

நிரப்பிக்கொள்கிறாய்...

 உன் நினைவுகள் முழுவதும் என்னை மட்டுமே நிரப்பிக்கொள்கிறாய்... வழியும் கனவுகளை மட்டுமேன் வடிகட்டப் பார்க்கிறாய்...

வாழ்க்கையும் கடல்தான்...

 நீந்தாமல் நெடுந்தூரம் கடக்கின்றன நீரோட்டமறிந்த ஆமைகள்... வாழ்க்கையும் கடல்தான்...

பசுமையாகிறேன் நான்...

 நிலமென சலனமின்றி கிடக்கிறேன்... அருகென வேர்ப்பிடிக்கும் உன் நினைவுகள்... பசுமையாகிறேன் நான்...

சமயங்களில்...

 கடும் வெயிலுக்குப் பிறகான அந்தியில் பொழிவதுபோல கூடிய பின் தூறிக் கலையும் மேகங்கள் விட்டுச்செல்லும் புழுக்கமான இரவைப் போல சமயங்களில் மாறிப்போகிறது வாழ்க்கை...

வற்றிப் போவதில்லை...

 கையள்ளி இறைப்பதால் கடல் வற்றிப் போவதில்லை... பிறகெப்படி உன் நினைவுகள் மட்டும் தீர்ந்துபோகும் தினமும் இரவு கொஞ்சம் தின்பதால்...

மனது...

 கடந்துபோன கணங்கள் திரும்பாதெனத் தெரிந்த பிறகும் அதைநோக்கி நடக்க விழைகிறது மனது...

வெடிக்கும் உன் நினைவுகள்...

 காய்ந்த கனகாம்பரச் செடியில் நீர் பட்டதும் பட்டென வெடிக்கும் விதைகள்போல இரவு தொட்டதும் வெடிக்கும் உன் நினைவுகள்... சிதறும் கனவுகள் ஒவ்வொன்றிலும் கொத்துக்கொத்தாக உன் நினைவுகள்...

பலி ...

 காற்றில் கரிபூசும் வண்டிகளுக்கு கறுப்புக்கம்பளம் விரிக்க பலி கொடுக்கப்படும் உயிர்வளி உமிழும் பசுமைகள்...

கானல்நீர்...

 நாவரள நடந்தபின்னும் கானல்நீர் காட்டுகிறது பாலை... ஊற்றுக்கு செல்லும்வரை உயிர்த்திருக்குமோ கால்கள்...

உன் நினைவுகள்...

 இருளில் நடக்கும் கனவுகளின் தோள்களில் இறக்கைகள் பூட்டுகின்றன உன் நினைவுகள்... பிறகென்ன வானமாகிறது இரவு...

வழிகாட்டிவிட்டு...

 என்ன செய்வது வேறு வழியில்லை  என்று சொல்லியபடியே எல்லாம் செய்துவிட்டு நிற்பவரைப்போல வழிகாட்டிவிட்டு நிற்கிறது வாழ்க்கை...

எஞ்சுவதில்லை...

 என் சோகங்கள்மீது உன் நினைவுகளைப் பூசிக்கொள்கிறேன் காயங்களின் மேல் பூசுகின்ற களிம்பைப்போல... வடுக்கள்கூட எஞ்சுவதில்லை...

என்ன செய்யுமென்று தெரியவில்லை...

 இரவுகளின் மறுபக்கத்தில் மறைந்திருக்கும் பகல்கள் போல துன்பங்களின் பின்னால் ஒளிந்திருக்கின்றன இன்பங்கள்... இந்த மேகங்கள் என்ன செய்யுமென்று தெரியவில்லை...

நினைவுகளில் நனைகிறேன்...

 மழையில் நனையும் குருவியென உன் நினைவுகளில் நனைகிறேன்... உடல் சிலிர்க்க சிதறும் கனவுகளில் நனைகிறது இரவு...

யாருமில்லை...

 உடைந்து துண்டுகளாக மாறிய பின்னரும் உருவம் காட்டத் தவறுவதில்லை கண்ணாடி... பார்ப்போர்தான் யாருமில்லை...

நகர்வதேயில்லை நொடிகள்...

 நீ இல்லாத நாட்களும் நகரவே செய்கின்றன... உன் நினைவுகள் இல்லாமல் நகர்வதேயில்லை நொடிகள்...

வானம்...

 இரவுகளும் பகல்களும் இருளும் ஒளியுமாக கடந்து செல்கின்றன உலகத்தை... அப்படியேதான் இருக்கிறது வானம்...

அறியாமலேயே...

 எனக்கும் உனக்குமான இடைவெளியை அதிகமாக்க எண்ணங்களை இழுக்கிறாய்... இடைவெளியை உன்னிதயம் என் நினைவுகளாலேயே நிரப்புமென்பதை அறியாமலேயே...

சிறு புன்னகை போதும்...

 துளித்துளியாய் வழியும் விழிநீரில் கவலைகள் கரைவதில்லை கடலளவு அழுதாலும்... கடந்து செல்ல சிறு புன்னகை போதும்...

நிரம்பிக் கிடக்கிறது காலம்...

 உயிர்க் கடிகையின் நொடி முள்ளில் அமர்ந்திருக்கும் உன் நினைவுகள் நகரும் போதெல்லாம் உதிர்த்துச் செல்லும் கனவுகளால் நிரம்பிக் கிடக்கிறது காலம்...

ஊரும் உறவும்...

 ஊரென்ன சொல்லுமோ உறவென்ன சொல்லுமோ என்ற சிந்தனை கலையும் முன்னரே கடந்து சென்றுவிடும் ஊரும் உறவும்...

அறியாமலேயே...

 கனமழையெனப் பொழியும் உன் நினைவுகளில் நனையாதிருக்க ஏதேதோ எண்ணங்களால் குடை விரிக்கிறேன்... பெருங்காற்றாக உருமாறும் உன் நினைவுகளென அறியாமலேயே...

வைவதால் பயனென்ன...

 பனிமலையின் இடையே வெந்நீர் ஊற்றுகளும் பாலையின் நடுவே நன்னீர் ஊற்றுகளும் வைக்கவே செய்கிறது இயற்கை... வழிமாறிப் பயணித்தபின் வைவதால் பயனென்ன...

ஒளிர்கின்றன கனவுகள்...

 ஆழியின் அடிவயிற்றில் சிப்பிகளென குவிந்துகிடக்கும் நினைவுகளில் உன்னைச் சுமப்பவை இரவில் திறக்க ஒளிர்கின்றன கனவுகள்...

வெந்நீரில்லை...

 வெண்பரிதி அள்ளித் தெளிக்கும் வெப்பம் குடித்த கடலும் நதிகளும் கருமுகில்களாகிப் பொழியும் மழையில் வெந்நீரில்லை...

நினைவெல்லைக்குள் விழுந்த பின்...

 நிகழ்வெல்லைக்குள் விழுந்துவிட்ட பருப்பொருளென மீளும் வழியற்றுப் போகிறேன் உன் நினைவெல்லைக்குள் விழுந்த பின்...

கழிகிறது காலம்...

 ஒற்றைப் பூட்டில் நிம்மதியைப் பூட்டிவிட்டு ஓராயிரம் சாவிகளை இறைக்கிறது வாழ்க்கை... சரியான சாவி தேடுதலில் கழிகிறது காலம்...

இதயத்திலிருந்து வழிவதில்லை...

 நிரம்பிய குடத்தில் நீரூற்ற வழிகிறது... ஏனிந்த இதயத்திலிருந்து வழிவதில்லை உன் நினைவுகள்...

விளைந்த பின்...

 வேர் தாங்கவும் நீர் தேங்கவும் இடம் கொடுத்த நிலம் காண விளைந்த பின் குனிகிறது நெற்கதிர்...

கனவுகள் பதித்து...

 சரிவில் இறங்கும் வேழமென என் இரவில் இறங்குகின்றன உன் நினைவுகள்... கால் தடமென கனவுகள் பதித்து...

நனையும் முன்னரே...

 பொழிவதா வேண்டாமாவென தயங்கி நகரும் மேகமென சமயங்களில் மகிழ்ச்சி தூவிச் செல்கிறது வாழ்க்கை... நனையும் முன்னரே காய்ந்ததும் விடுகிறது...

என்ன செய்கிறாய்...

 என்னை நீ என்ன செய்கிறாய்... இதயத்தை எடுத்துக்கொண்டாய் இருவிழிகளிலும் உனை வரைந்தாய் செவிகளிரண்டிலும் உன்பெயரை மட்டும் ஒலிக்கச்செய்தாய் சிந்தையில் உனைமட்டுமே செதுக்கிவிட்டாய்... இன்னுமென்ன மிச்சமிருக்கிறது...

வாழ்க்கை நீரோட்டத்தில்...

 பெருநதியில் கலக்கும் சிற்றோடையொன்று சுயமிழந்து போவதுபோல என்னை இழக்கிறேன் வாழ்க்கை நீரோட்டத்தில்...

மருந்தென அப்பிக்கொள்கின்றன...

 இருளுக்குள் மூழ்கும் இரவில் என் இதயத்தின் காயங்களை எப்படிப் பார்த்தனவோ உன் நினைவுகள் மருந்தென அப்பிக்கொள்கின்றன...

தொலைவில் எறிகிறது...

 நெஞ்சத்தை எடுத்து நெருஞ்சி முட்கள்மீது வைத்துவிட்டு செருப்புகளைத் தொலைவில் எறிகிறது வாழ்க்கை...

வெளியே நிற்கின்றன...

 உறக்கம் தின்று செரிக்காத இரவுகள் உன் நினைவுகளோடு நடைபயில எரியும் விழிகளுக்கு வெளியே நிற்கின்றன கனவுகள்...

தவறுவதில்லை புவி..

 அழுத்தமும் வெப்பமும் அதீதமாக கொதிக்கும் குழம்பை அடிவயிற்றில் சுமந்தபோதும் பனிமலைகள் தாங்கத் தவறுவதில்லை புவி..

விழுவதேயில்லை...

 பாறை பற்றியேறும் உடும்பென இதயம் பிடித்தேறும் உன் நினைவுகள் இரவெப்படி இழுத்தாலும் விழுவதேயில்லை...

அறியாமையின் விலையை...

 தெருவிளக்கை சுற்றிப் பறக்கும் சிறுபூச்சிகளின் உதிர்ந்த இறகுகள் அறிகின்றன அறியாமையின் விலையை...

காற்றாகின்றன கனவுகள்...

 இரவுப்படகு பாய்மர இருளை விரிக்க உன் நினைவின் அலைகளைக் கடக்க காற்றாகின்றன கனவுகள்...

ஒளிந்திருக்கிறது...

 மலர் கொய்யும்போது கீறும் முட்களில் இல்லாத வலி மண்ணில் நடக்கும்போது கீறும் முட்களுக்குள் ஒளிந்திருக்கிறது...

துளிர்க்கும் கனவுகள்...

 நடக்கும்போது ஒட்டிக்கொள்ளும் நாயுருவி விதைகளென இரவோடு ஏறிக்கொள்ளும் உன் நினைவுகள் உதிரும் இடத்தில் துளிர்க்கும் கனவுகள்...

பொதிந்திருக்கிறது பாடம்...

 தீரும்வரை பொழிகிறது மேகம்... திகட்டும்வரை நனைகிறது நிலம்... நெகிழ்ந்த மண்ணை நெட்டித்தள்ளும் முளைக்கும் விதைக்குள் பொதிந்திருக்கிறது பாடம்...

நிரம்புகின்றன கனவுகள்...

 ஈரமண்ணில் பதியும் காலடித் தடங்களென இரவில் பதியும் உன் நினைவுகளின் தடங்களில் நிரம்புகின்றன கனவுகள்...

கனவுகளோடு..

 நுகத்தடியில் பூட்டிய காளைகளென இரவை இழுத்துச் செல்கின்றன உன் நினைவுகள்... ஏறி அமர்ந்து பயணிக்கும் கனவுகளோடு..
 விண்மீன்களை விதைக்கிறது இரவு... விளையும் வெளிச்சத்தை அறுக்கும் முன் விடிந்தே விடுகிறது...

மெல்லத் திரள்கிறது...

 இடமும் வலமும் தயிருக்குள் சுழலும் மத்தாக மாறிப்போகும் உன் நினைவு உறக்கம் கடைய மெல்லத் திரள்கிறது கனவு வெண்ணெய்...

ஒதுங்கித் திரும்புவதில்லை...

 கடல்தேடி ஓடும் நதி ஒருபோதும் ஒதுங்கித் திரும்புவதில்லை உப்புக்கரிக்கும் நீரென்று..

என் உறக்கம்...

 இரவின் கரைகள் உடைத்துப் பாயும் உன் நினைவுகளின் நதியில் மிதக்கும் கனவுகளின்மேல் தள்ளாடுகிறது என் உறக்கம்...

காட்டுத்தீ...

 திரியில் எரியும் சிறுசுடர் மென்காற்றில் அசையும்... அணையும்... பெருங்காற்றும் தின்று எரியும் காட்டுத்தீ...
 உன் உதடுகள் உச்சரிக்கவுமில்லை... என் செவிகள் கேட்கவுமில்லை... ஆனாலும் இதயங்கள் இரண்டும் எழுதிக்கொண்டன சொல்லாத சொற்களை...

நிரப்புகிறது மௌனம்...

 உணர்வுகளின் மேல் உருளும் சொற்கள் உருப்பெறும் முன் உடைந்துபோகும் கணங்களை நிரப்புகிறது மௌனம்...

கனவுகளின் கதகதப்பில்...

 ஓட்டினுள் உறங்குகிறேன் உன் நினைவுகளோடு... நத்தைபோல நகர்கிறது இரவு... கனவுகளின் கதகதப்பில்...

சரிவதில்லை...

 வேர்கள் பரவ நெகிழும் நிலம் சரிவதில்லை...

வழிகின்றன கனவுகள்...

 ஒரு கலம் பிளவுற்றுப் பெருகி உயிராக உருவாவதுபோல உன் நினைவுகள் ஒவ்வொன்றும் கனவுகள் பெருக்க உறக்கத்திற்கு வெளியிலும் வழிகின்றன கனவுகள்...

பூக்காமலா இருக்கிறது தீவு...

 திசைகள் நான்கிலும் கரிக்கும் கண்ணீரென கடல்நீர் சூழ தனித்தே இருந்தபோதும் பூக்காமலா இருக்கிறது தீவு...

மெல்ல ஏறுகிறது துரு..

 திடமான முடிவோடு திரும்பாமல் இருந்தேன் இரும்பென... ஈரக்காற்றென உன் நினைவுகள்... மெல்ல ஏறுகிறது துரு...

எரிகிறது வாழ்க்கை...

 எரிமலையின் உருகிய குழம்பு இறுகும்வரை எரிவதுபோல உள்ளம் இறுகும்வரை எரிகிறது வாழ்க்கை...

ஒளிர்கிறது உறக்கம்...

 அந்திமக்கால விண்மீனொன்று விசிறியடிக்கும் கதிர்வீச்சென உன் நினைவுகள் அள்ளித்தெளிக்கும் வண்ணச் சிதறல்களில் ஒளிர்கிறது உறக்கம் உள்ளுக்குள்...

எப்போதுமே ...

 குளத்தின் கரைகள் கோணல்தான்... ஒற்றைக் கல் எழுப்பும் அலைகள் மட்டும் எப்போதுமே வட்டமாக...

இரவெப்படி விடியும்....

 முடிவில்லாப் பின்னங்கள் செய்யும் முழுஎண்கள் இரண்டாக உன் நினைவுகளும் கனவுகளும் மாறிப்போனபின் இரவெப்படி விடியும்....

நிலம்போலவே...

 கடந்து செல்லும் மேகங்களெல்லாம் பொழிந்து விடுவதில்லை... பொழிகின்ற மேகங்களெல்லாம் கடக்காமல் நிற்பதில்லை... வாழ்க்கையும் நிலம்போலவே வானம் பார்த்துக் கிடக்கிறது...

காத்திருக்கின்றன இரவில்...

 இருவிழிகளால் இதயம் உழுது நினைவுகளை விதைக்கிறாய் பகலில்... கனவுகள் கதிராகி அறுவடைக்குக் காத்திருக்கின்றன இரவில்...

வலி நீக்கும் வழி...

 பெருங்காற்றில் முறிந்த மரங்கள் வலி... பிழைத்த செடிகளுக்கு நீர்வார்த்தல் வலி நீக்கும் வழி...

படுகையாகிறது...

 பனிமலை உருகிட பெருகிடும் நதியென உன் நினைவுகள் உருகிட பாயும் கனவுகளுக்கு படுகையாகிறது என் உறக்கம்...

உணரவில்லை...

 விழுவதும் எழுவதும் பரிதிக்கொன்றும் புதிதல்ல... பாவம் நாள்தான் அதனை உணரவில்லை...

சேமிக்கிறேன் பத்திரமாக...

 பெருந்தோகையிலிருந்து பீலிகள் உதிர்க்கும் மயிலென நீ விட்டுச்செல்லும் நினைவுகளை என் நினைவுகளின் பக்கங்களுக்கு இடையே சேமிக்கிறேன் பத்திரமாக... என் நினைவடுக்குகளைப் புரட்டும் உறக்கத்தின் கைகளெங்கும் கனவுகளின் வண்ணங்கள்...

நசுக்குகின்றது கனவுகளை...

 கனவுகளின் கல்லறைமீது காலூன்றி நிற்கும் யதார்த்தத்தின் அழுத்தம் இப்போதும் நசுக்குகின்றது கனவுகளை...

எரிகின்றன விழிகள்...

 அகல் விளக்கு ஏந்தி வரும் அணங்கென உன் நினைவுகள் ஏந்தி நடக்கும் கனவுகள் காலிடறி என் உறக்கத்தில் உருண்டுவிழ தீப்பற்றிக்கொண்டு திண்டாடுகிறது உறக்கம்... எரிகின்றன விழிகள்...

சலனமில்லை...

 சலனமில்லா நீரின்மீது தாவியபின் சலனமில்லை தவளையிடம்...
 மகரந்தத்தில் விழுந்த வண்டு மறுபடியும் பறக்கும்போது மஞ்சளாக மாறுவதுபோல உன் நினைவுகளில் புரண்டெழுந்தபின் நீயாகவே மாறிப்போகிறேன் நான்...

அறிந்தேயிருக்கிறது...

 வீசும் காற்றில் விரித்த தலையோடு ஆடும் பனைமரம் அறிந்தேயிருக்கிறது ஒடியாமல் வளைவதற்கு...

நெஞ்சின் ஆழத்தில்...

 வற்றிப்போன ஆற்றின் வறண்டுபோன மணற்பரப்பின் கீழே ஒளிந்திருக்கும் ஊற்றுநீரென உன் நினைவுகள் நெஞ்சின் ஆழத்தில்... எத்தனை தொலைவில் நீ இருந்தாலும்...

என்ன தேடுகின்றன...

 நிலவில்லா இரவு... இருள்வழியும் பொழுது... வெள்ளிமீன்களின் ஒளிச்சிதறல்களின் ஊடாக என்ன தேடுகின்றன இந்த மேகங்கள்...

இன்னும்கூட இடமிருக்கிறது...

 ஒருசில சொற்களை உதிர்த்துச் செல்கிறாய் ஒவ்வொன்றாய் எடுத்துக் கோர்க்கிறேன்... சிறுசிறு புன்னகைகள் சிதறிச் செல்கிறாய் சேர்த்தெடுத்து வைக்கிறேன்... நினைவுகளின் அடுக்குகளில் இன்னும்கூட இடமிருக்கிறது...

எதிர்த்து நீந்துகின்றன...

 இறந்த இலைகள் மிதந்து செல்கின்றன நதியோடு... வாழும் மீன்கள் எதிர்த்து நீந்துகின்றன விதியோடு...

கனவு வண்டுகள்...

 மொட்டொன்று கட்டவிழ்வதைப்போல மலர்கிறது இரவு... அடுக்கடுக்காய் விரியும் இதழ்களென உன் நினைவுகள்... மொய்க்கின்றன கனவு வண்டுகள்...

பறக்கிறேன் நின்றபடியே...

 இரு கைகள் விரிக்கிறேன் இறக்கைகளென... முகில் நோக்கி முகம் தூக்குகிறேன் நிலமென... முத்து முத்தாக மொத்தமாய் பெய்கிறாய்... இப்போது பறக்கிறேன் நின்றபடியே...

மன்றாடுகிறேன் நான்...

 துளித்துளியாய் வாழ்க்கையைப் பருகுகிறது மரணம் மது சுவைப்பதுபோல... மன்றாடுகிறேன் நான் மருந்தென ஒரே மிடறில் விழுங்கிவிட...

நினைவுகளின் அச்சில்...

 விடியாமல் நீளும் இரவொன்றில் முடியாமல் தொடரும் கனவொன்றில் நிற்காமல் சுழல்கிறாய் நீ நிலையான நினைவுகளின் அச்சில்...

நகர்கிறது பக்குவமாக...

 முட்டும் பாறைகளில் மோதி ஆர்ப்பரிக்கும் நதியொன்று பட்டு மணற்பரப்பு தொட்டதும் நகர்கிறது பக்குவமாக...

ஏனென்று தெரியவில்லை...

 ஏனென்று தெரியவில்லை... என்னிலிருந்து உன்னை நீ தொலைவில் வைத்துக் கொள்கிறாய்... அதனாலென்ன எப்போதும்போல உன் நினைவுகளை நெஞ்சத்தில் தைத்துக் கொள்கிறேன்...

வாழ்க்கை இலையில்...

 தழைத்த இலையைக் கடித்துத் தின்று காலி செய்யும் கம்பளிப் புழுக்களென நெளிகின்றன கவலைகள் வாழ்க்கை இலையில்...

கண்ணாடிச்சுவர்...

 உன் விழிகள் தேடுவதை நான் பார்க்கிறேன்... என் விழிகளில் ஏக்கத்தை நீ பார்க்கிறாய்... பின்னும் ஏனிந்த கண்ணாடிச்சுவர் நமக்கிடையே...

கழிகிறது காலம்...

 விடையில்லாக் கேள்விகளின் கடலில் விடைகள்தேடி நீந்துவதில் கழிகிறது காலம்...

எனக்கு வியர்க்கிறது...

 உனக்குள் என்னைப் பொதிந்துகொண்டு ஏதேதோ போர்வைகளால் போர்த்திக்கொள்கிறாய்... எனக்கு வியர்க்கிறது...

வேறெதுவும் மிச்சமில்லை...

 ஒவ்வொரு அடுக்காக உரிக்கிறேன்... விழிநீர் தவிர வேறெதுவும் மிச்சமில்லை... வெங்காய வாழ்க்கை...

கைகூடும்வரை...

 உன்னோடு கதைத்த பொழுதுகளுக்குள் புதைந்து கிடக்கும் மகிழ்ச்சி குவியலை உன்னோடு கதைக்காத பொழுதுகளில் தேடியபடியே கடத்துகிறேன் நேரத்தை உன்னோடு கதைக்கும் பொழுதுகள் கைகூடும்வரை...

அப்படியேதான் இருக்கிறது...

 வளர்பிறையும் தேய்பிறையும் வந்து வந்து போனாலும் அப்படியேதான் இருக்கிறது நிலவு...

மின்னல்கள்...

 மேகங்களைப்போல மென்மையாகத்தான் தீண்டிக் கொண்டன விரல்கள்... மேனியெங்கும் பிறக்கின்றன மின்னல்கள்...

மௌனம்...

 சொற்களில் கடத்த இயலா உணர்வுகளை உறிஞ்சியபின் கனத்துதான் கிடக்கிறது மௌனம்...

கனவுகள் பொறுக்குகிறது...

 இரவுப் பேராழியின் கரைகளில் மணலெனக் குவிந்துகிடக்கும் உன் நினைவுகளில் சிப்பி சேகரிக்கும் சிறுவன்போல கனவுகள் பொறுக்குகிறது உறக்கம்...

முடிந்து விடுவதில்லை...

 வானமொன்றும் இடிந்து விழுவதில்லை மேகங்கள் நகர்ந்துவிட்டால்... வாழ்க்கையொன்றும் முடிந்து விடுவதில்லை சொந்தங்கள் விலகிவிட்டால்...

உருகுகிறேன்...

 மின்சாரப் பார்வையால் நீயென்னைத் தீண்டிச் செல்கிறாய்... வெட்டும் மின்னல் தொட்டுவிட்ட பட்ட மரமென பற்றிக்கொண்டு திகுதிகுவென எரிகிறேன்... தீயென்னைச் சுடவேயில்லை... கருகவில்லை நான் உருகுகிறேன்...

மேகங்கள்...

 கடல் குடித்து காற்றிலேறி விண்ணில் மிதந்து நிலத்தின் நெருப்பணைத்த பின் கடல் சேர்கின்றன மேகங்கள்...

வானும் மண்ணுமாய்...

 சிறுகுருவிக் கூட்டமென சிறகடிக்கும் உன் நினைவுகள் கனவுக்கூடுகளில் கண்ணயர்கின்றன... வானும் மண்ணுமாய் நீ...

சிரிக்க மறப்பதில்லை...

 பாறையிடுக்கில் வேர்பற்றி வளைந்து வளரும் செடியிலும் சிரிக்க மறப்பதில்லை பூக்கள்...

பாலமாக நீ...

 உன் நினைவுகள் ஒருகரை... என் எழுத்துக்கள் மறுகரை... பாலமாக நீ...

சுகம்தான்...

 மிதக்கும் மேகங்கள் தொடும் தூரத்தில் சுகம்தான்... கால்கள் கடும்பாறைகள் கடந்து முகடுகள் தொட்டபின்...

மறுத்தாலும்...

 அலைகிறேன் கலைகிறேன் பொழிகிறேன் கரைகிறேன் வடிவம் இழக்கிறேன் வண்ணம் தொலைக்கிறேன்... மறுத்தாலும் என் வானம் நீ... வெறுத்தாலும் உன் மேகம் நான்...

கவலைகள்...

 பூந்தூறலென சிறுநிகழ்வுகளின் மகிழ்ச்சிகளில் முகம்நனைக்கும் வேளையில் கால்களுக்கு கீழே கரைபுரளத் தொடங்குகின்றன கவலைகள்...

நடுங்குகிறேன்...

 நீரள்ளித் தெளித்துச் செல்லும் மேகங்களென நினைவுகளை அள்ளித் தெளித்துவிட்டு நகர்ந்துவிடுகிறாய்... நனைந்தபின் நடுங்குகிறேன்... கனவுகளேனும் கொடு போர்த்திக்கொள்ள...

சிதறித்தான் போகின்றன...

 கனம் ஏற்றிக்கொண்ட கற்கள் சிதறித்தான் போகின்றன... சிகரங்களிலிருந்து உருளும்போது...

இருக்கும்வரை...

 உள்மூச்சும் வெளிமூச்சும் உயிர்த்திருக்கும் உன் நினைவுகள் என்னோடு இருக்கும்வரை...

நிறமற்றுதான் இருக்கிறது...

 நிறமற்றுதான் இருக்கிறது வானம்... நீலம் பூசிச்செல்கிறது பகல்... இருளெறிந்து செல்கிறது இரவு...

கூர்மை...

 என் நினைவுகளின் கூர்மை ஒருவேளை உன் நெஞ்சம் கீறலாம்... வலி வழியும் முன்னரே ஒட்டிக்கொள்ளும் என் நினைவுகள் மருந்தென...

இறுதியிலேனும்...

 என்னோடு உன் நினைவுகள் விரல் கோர்த்து நடக்கின்ற பயணத்தின் பெருவழியின் இறுதியிலேனும் இருப்பாயா நீ...?

பொதிந்திருக்கின்றன...

 சொல்லப்படாமல் தொண்டையோடு நின்றுவிட்ட சொற்களுக்குள் பொதிந்திருக்கின்றன உணர்வுகளின் உண்மைகள்...

எங்கோ நிற்கிறது...

 இருளுக்குள் வழியறியாது எங்கோ நிற்கிறது என் உறக்கம்... உன் நினைவுகளைக் காட்டி அழைத்து வருகிறேன் என்கின்றன கனவுகள்...

துளியளவு...

 துளியளவு தேனெடுத்துவிட்டு மலருக்குள் மரம்வைத்துச் செல்கின்றன தேனீக்கள்...

என்செய்வாய்..

 நகங்களெனில் வெட்டிவிடுவாய்... விரல்களெனில் என்செய்வாய்..

கதகதப்பில்...

 அடிமடியின் வெப்பத்தில் அடைகாக்கும் பறவையென உயிர்ச்சூட்டின் கதகதப்பில் வைத்திருக்கிறேன் உன் நினைவுகளை... சிறு பறவைகளின் கீச்சொலியென சிரிக்கின்றன கனவுகள்...

சொல்லித் திரிகிறான்...

 மின்மினிப் பூச்சிகளை விண்மீன்கள் என்று சொல்லி விற்பனை செய்கிறார்... பறக்கின்றன விண்மீன்கள் என்றே பரவசமடைகிறார்... பறப்பதில்லை விண்மீன்களென சொல்லித் திரிகிறான் பித்தன்...
 இரவுப் பெருங்காற்று எழுப்பிப் பறக்கவைக்கும் உன் நினைவுகளில் ஏதோ ஒன்று என் உறக்கத்தின் விழிகளில் விழ விழிநீரென வழிகின்றன கனவுகள்... உறக்கம்தான் பாவம்... உழல்கிறது உறுத்தலில்...

இருந்தவரையில்...

 பச்சைமண்ணாக இருந்தவரையில் இடையூறுகள் ஏதுமில்லை... பானையாக வனையப்பட்டபின் நெருப்பில் சுட்டு எடுக்கிறது வாழ்க்கை...

தெரிந்துகொண்டே...

 வெவ்வேறு எண்ணங்களைக் கம்பிகளாக்கி வேலியிடுகிறாய்... வெள்ளாடல்ல என் நினைவுகள் வீசும் காற்றென தெரிந்துகொண்டே...

மெலிதாக ஒளிர்கின்றன...

 முயன்று தோற்றவனின் புன்னகையென மெலிதாக ஒளிர்கின்றன உடுக்கள் நிலவில்லா வானில்...

இனிக்கிறேன் நான்...

 நீ இமைக்கும்போது சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் இதழ்களில் தேனுண்டபின் என்னில் இளைப்பாற இனிக்கிறேன் நான்...

கிழிப்பதில்லை...

 கண்பறிக்கும் ஒளியுடன் இருள்கிழிக்கும் மின்னல்கள் இரவைக் கிழிப்பதில்லை எப்போதும்...

கொண்டாடவே செய்கின்றன...

 திருவிழாக்கள் இல்லையெனினும் சிறுவிழாக்கள் கொண்டாடவே செய்கின்றன உன் நினைவுகள் என் உறக்கத்தில் கனவுகள் தூவி...

வெறுங்காலுடன்...

 சுடுமணல் பரப்பொன்றில் நிறுத்திவைத்து வெறுங்காலுடன் கடக்கச் சொல்கிறது வாழ்க்கை...

எப்போதும்...

 இரவுகளும் பகல்களும் என்னைக் கடந்து செல்கின்றன... உன் நினைவுகள் மட்டுமேன் என்னுடனே நிற்கின்றன எப்போதும்...

சட்டெனக் கவிழ்கிறது...

 உச்சிக்குப்பின் நேரத்தோடு நீளும் நிழல்கள் உச்சம் தொட்டபின் சட்டெனக் கவிழ்கிறது இருள்...

இறுக மூடிக்கொள்கிறேன்...

 விண்மீன்கள் மழை இருளுக்குள் பொழிய இறுக மூடிக்கொள்கிறேன் உன் நினைவுகளால் நெய்த இரவை...

முன்னோக்கி...

 நெடுஞ்சாலையில் பின்னோக்கி நகரும் மரங்கள் முன்னோக்கி நகர்த்துகின்றன பயணத்தை...

ஒவ்வொன்றாய்...

 உன்னைச் சுமக்கும் நினைவுகளை ஒவ்வொன்றாய் எறிகிறது இரவு... கனவலைகளில் கலங்கிப்போகிறது என் உறக்கம்...

கடந்தகாலம்...

 நீர்வற்றிய குளமொன்று கனவுகளில் மீன் சுமப்பதுபோல கடந்தகாலம் சுமக்கின்றது நெஞ்சம்...

என் உறக்கம்தான்...

 இனிப்பை மொய்க்கும் எறும்புக் கூட்டமென என் இரவை மொய்க்கும் உன் நினைவுகள்... இரையாகிப் போவதென்னவோ என் உறக்கம்தான்...

தேங்கியபின்...

 ஓடும்வரை நீரில் ஒட்டவில்லை... தேங்கியபின் படர்கிறது பாசி...

கை கோர்க்கிறது இரவு...

 உன் நினைவுகள் பற்றிப் படரும் கொழுகொம்பாகிறது என் உறக்கம்... மொட்டவிழும் கனவுகளோடு கை கோர்க்கிறது இரவு...

வானம் மட்டுமே...

 நான்கு தூண்களும் உடைக்கப்பட்ட பிறகு தலையில் விழும் கூரையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு இனி வானம் மட்டுமே கூரை...

அறியாமலேயே...

 தொட்டாற்சிணுங்கி செடியைப்போலவே மூடிக்கொள்கின்றன உன் இமைகள் என் நினைவுகள் வருடும்போது... வருடுவது என் நினைவுகளென அறியாமலேயே உறங்கிப்போகிறாய் நீ...

ஒருநாள்....

 அடைபட்ட நீரின் அதீத அழுத்தத்தால் உடைபடும் அணைகள் ஒருநாள்....

மெல்ல உருள்கிறது...

 வண்டி நிறைக்கும் பொதிகளென கவலைகள்... முனகி இழுக்கும் மாடாக நான்... மெல்ல உருள்கிறது வாழ்க்கை...

சிதறுகின்றன கனவுகள்...

 மனம் வருடும் மயிலிறகாய் உன் நினைவுகள்... சிலிர்க்கும்போது சிதறுகின்றன கனவுகள்...

ஒவ்வொரு செங்கலாக...

 சிறு சிறு செங்கற்களாய் ஆசைகள் அடுக்கிவைத்து கட்டுகிறேன்... ஒவ்வொரு செங்கலாக உருவுகிறது வாழ்க்கை...

இறக்கைகளில் வண்ணங்களாக...

 இரவுப் பூங்காவெங்கும் படபடக்கும் பட்டாம்பூச்சி கனவுகளின் இறக்கைகளில் வண்ணங்களாக உன் நினைவுகள்...

வருடிச் செல்கிறது...

 எங்கோ விழுகின்ற இளந்தூறல்கள் எழுப்புகின்ற மண்வாசம் பொழியாத தூரத்தையும் வருடிச் செல்கிறது...

இறுகப் பற்றிக்கொண்டே...

 நீ என் நினைவுகளை வேகமாக உதறுகிறாய் இறுகப் பற்றிக்கொண்டே...

உடைந்ததும்...

 உடையாதவரை முகம் காட்டிய கண்ணாடி உடைந்ததும் உடல் கீறுகிறது...

அவை அறியவில்லை...

 உன்னை அழுத்தும் சுமைகள் எண்ணுகின்றன என்னை மறக்கவைப்பதாக... அவை அறியவில்லை என் நினைவுகளை நீ சுமக்கும்போது இதர சுமைகள் எடை இழக்குமென்று...

இன்றைய பொழுது...

 அதிகாலைத் தூறல்கள் பூபாளம் இசைக்க அந்திமாலைத் தூறல்கள் நீலாம்பரி படிக்க விழித்து உறங்குகிறது இன்றைய பொழுது...

கேட்பதே இல்லை...

 இரவென்னை உறங்கச்சொல்வது என் இமைகளை இழுத்துப் பிடிக்கும் உன் நினைவுகளுக்கு கேட்பதே இல்லை...

தொலைவு நீளும்போது...

 சுட்டெரிக்கும் விண்மீன்களும் விட்டு விட்டு விளக்கெரிக்கும் மின்மினிகளாகின்றன தொலைவு நீளும்போது...

கண்களுக்கு வெளியே...

 பசித்துக் கிடக்கும் உன் நினைவுகள் என் உறக்கம் தின்றபின் பசியாற கண்களுக்கு வெளியே காத்திருக்கின்றன கனவுகள்...

நிழல் விரிக்கிறது மரம்...

 நீர்தேடி நிலம் புகுந்த வேர்களுக்கு வியர்க்காமல் நிழல் விரிக்கிறது மரம்...

என்னிடமே சொல்கிறாய்...

 ஒளி சூடிய வானினை இருள் மூட ஒளி சிந்தும் உன் விழிகளை இமைகள் மூட கனவுகளில் நான் வருவதில்லையென என்னிடமே சொல்கிறாய் உன் கனவில்...

சுழலும்வரை மட்டுமே...

 சுடரால் சுடும் கோளத்தை சுற்றும் கோளம் சுழலும்வரை மட்டுமே பிழைத்திருக்கும்...

உன் கண்களன்றி...

 என் விழிகளுக்கு உன் விழிகளால் வேலியிட்டாய்... என் விழிகளுக்குள் உன் விழிகள்தவிர எஞ்சியவற்றை காலிசெய்தாய்... பிறகெப்படி கனவுகளுக்குள் வேறெதுவும் வரும் உன் கண்களன்றி...

அழகாகவே இருக்கிறது...

 கரிசல் மண்ணில் உதிர்ந்து கிடக்கும் வெள்ளை மலர்கள்... அழகாகவே இருக்கிறது இரவு வானம்...

நீயேயாகிறாய்...

 நீளக்கயிற்றில் கட்டிய காளையாக உன் நினைவுகளால் கட்டி வைத்திருக்கிறாய் என்னை... நான் சுற்றிவரும் இடமெல்லாம் நீயேயாகிறாய்...

சுழலவே செய்கிறது இயற்கை...

 நீரிருந்த இடமெல்லாம் நிலமாகிப்போக நிலமாக இருந்த இடம் நீருக்குள் மூழ்க சுழலவே செய்கிறது இயற்கை... சுழலுக்குள் இருப்பதால் சுழலாததுபோல் உணர்வார்போலும் மனிதர்...

நித்தமும் கனவுகளாகின்றன...

 விரல்களில் ஒட்டிக்கொண்ட வண்ணத்துப்பூச்சி இறக்கை வண்ணங்கள் சிறுபிள்ளை வாய்மொழியில் விதவிதமாய் கதைகளாவதுபோல நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட உன் நினைவுகளும் நித்தமும் கனவுகளாகின்றன...

சிற்றோடையின் சிணுங்கல்கள்...

 பெருமழையொன்றின் பிறகான அருவியின் ஆர்ப்பரிப்பில் அமிழ்ந்துபோகின்றன சிற்றோடையின் சிணுங்கல்கள்...

இரவென்று பெயர்...

 என் கனவுகளின் வெளியில் உன் நினைவுகள் உலவும்நேரம் கவிழும் பொழுதுக்கு இரவென்று பெயர்...

துடுப்பல்ல கடல்...

 பெருங்கடலின் அலைகள் தாண்டி வலைகள் வீசும் மனிதரின் நம்பிக்கை துடுப்பல்ல கடல்...

பறக்கும் கனவுகள்...

 கனலெனத் தகிக்கும் உன் நினைவுகள்... காய்ந்த சருகென என் உறக்கம்... பரபரவெனப் பற்றியெரியும் வெளிச்சத்தில் இங்குமங்கும் பறக்கும் கனவுகள்...

சாய்கிறது உயர்ந்த மரம்...

 நசநசவெனப் பெய்யும் தூறல்களில் நெகிழ்ந்த மண்ணில் வேர்ப்பிடிப்புகள் நழுவும் நேரம் உரத்த காற்றில் சாய்கிறது உயர்ந்த மரம்...

உன் இதயம்தவிர...

 உன் எண்ணங்களிலிருந்து என்னைத் தள்ளுகிறாய்... என்னை எண்ணாததுபோலவே நேரம் கொல்லுகிறாய்... தள்ளினாலும் விழுவதற்கு வேறிடம் எது உன் இதயம்தவிர...

கருமுகில்கள்...

 பெருவெள்ளம் சுமக்கும்போதும் மிதக்கவே செய்கின்றன கருமுகில்கள்...

கனவுகளின் கதையையும்...

 விடியலில் என் விழிகளிலோடும் செவ்வரிகள் சொல்கின்றன உறக்கம் திருடிய உன் நினைவுகளின் கதையையும் உறங்கச் சொல்லிய கனவுகளின் கதையையும்...

கனவில் கனக்கிறது...

 நிறைந்தோடும் நதியின் நீரின் அடியில் உருண்டோடும் சிறுமணல் துகள்களின் கனவில் கனக்கிறது பெரும்பாறை...

என் உறக்கம் தேடுகின்றன...

 மண்ணுருண்டை சுமக்கும் சிறு குளவி இடம்தேடுவதுபோல உன் நினைவுகள் சுமக்கும் கனவுகள் என் உறக்கம் தேடுகின்றன...

ஆசைகள்...

 வாழ்க்கை நதியில் நீந்துகிறேன்... வழியெங்கும் தூண்டில் முட்களில் புழுவாய் நெளிகின்றன ஆசைகள்...

கவனிக்கத்தான் யாருமில்லை...

 எரியும் சுடரென உன் நினைவுகள்... சிதறும் ஒளியென கனவுகள்... மெழுகென உருகுகிறது இந்த இரவு... கருகும் திரியான என் உறக்கத்தைக் கவனிக்கத்தான் யாருமில்லை...

வேறிடம் நகர்கிறது...

 மரத்தின் மேலிருக்கிறது நிலவு... இலைகளெங்கும் வழியும் நிலவு வேரில் சொட்டும்முன் வேறிடம் நகர்கிறது...

வழிந்தோடுகிறது உறக்கம்...

 வலியும் களைப்பும் தேங்கிநிற்கும் வரிப்பள்ளங்கள் விழிச்சுருக்கத்திலும் முகச்சுழிப்பிலும் என் விழிகளில் விழுந்தபின் வழிந்தோடுகிறது உறக்கம்...

இரவு....

 நெஞ்சமெங்கும் நிறங்களைத் தூவிச் செல்கின்றன உன் நினைவுகள்... வானவில் கனவுகள் வரைகிறது இரவு....

காய்ந்துகொண்டே...

 வெயில் காய்ந்துகொண்டே நிழல் தருகிறது மரம்...

உதிர விரும்புகிறேன்...

 மலர்போலவே உதிர விரும்புகிறேன்... உதிர்ந்த பின்னும் கிளை தேடாமல்...

வேறென்ன செய்வாய்...

 நான் தூங்கவில்லை என்றேன்... நீயோ தூங்கினேன் என்றாய்... என் நினைவுகள் காவலிருக்கும்போது நிம்மதியாகத் தூங்காமல் வேறென்ன செய்வாய்...

குஞ்சுகளின் பசி...

 வல்லூறு தீட்டும் அலகிலிருந்து உதிரும் இறகில் உறைந்திருக்கும் குருதியில் நிறைந்திருக்கிறது ஏதோவொரு கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளின் பசி...

ஏனிப்படி செய்கிறாய்..

 என் பகல்களை உன் நினைவால் கொய்கிறாய்... என் இரவுகளில் கனவுகளாகப் பெய்கிறாய்... தினமும் நீ ஏனிப்படி செய்கிறாய்..

ஒருநாள்...

 அடைபட்ட நீரின் அதீத அழுத்தத்தால் உடைபடும் அணைகள் ஒருநாள்....

உறங்கிப்போகிறாய் நீ...

 தொட்டாற்சிணுங்கி செடியைப்போலவே மூடிக்கொள்கின்றன உன் இமைகள் என் நினைவுகள் வருடும்போது... வருடுவது என் நினைவுகளென அறியாமலேயே உறங்கிப்போகிறாய் நீ...

என்ன சொல்லிவிடமுடியும்...

பகலின் வெளிச்சத்தில் கண்களிரண்டையும் இறுக மூடிக்கொண்டு இருளெனப் பிதற்றுபவருக்கு இரவில் மட்டும் என்ன சொல்லிவிடமுடியும்...

இரவு...

நீ நினைவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறாய்... நான் கனவுகளின் ஒளியில் தேடுகிறேன்... ஓசைகளின்றி பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு...

என் தவறுதான்...

உண்மை ஒளிரும் பரிதியைப்போல என்றேன்... பகடிக்கு ஆளானேன்... என் தவறுதான் ஆந்தைகளிடம் சொன்னது...

இமைகளுக்குள் கசிக்கிறாய்...

பெருமலையின் சரிவுகளிடையே தேங்கிய நீர் கரும்பாறையில் கசிவதைப்போல என் எண்ணங்களில் தேங்கிய நீ இமைகளுக்குள் கசிக்கிறாய் கனவுகளாக...

அருகில் செல்லும்வரை தெரிவதில்லை...

ஒளியும் நிழலும் கோலமிடும் சாலையில் அருகில் செல்லும்வரை தெரிவதில்லை குழிகள்...

நீ விட்டுச்சென்ற புன்னகையுடன்...

ஓரிரு சொற்களுடன் நீ கடந்துவிட்டாய்... நான் நெடுநேரமாய் பேசிக்கொண்டிருக்கிறேன் நீ விட்டுச்சென்ற புன்னகையுடன்...

என் நண்பர்கள்...

திங்களில் பாதி வளர்ந்து திங்களில் மீதி தேய்ந்திடும் திங்களென ஒருவேளை நான் இருக்கக்கூடும்... ஆனாலும் என் நண்பர்கள் எப்போதும் வானமே...

உன்னை சுவாசித்தபடி...

ஆழிநீரின் அடர்பரப்பில் நீந்துகின்ற திமிங்கலமென கனவுகளுக்குள் நீந்துகின்றேன்... அவ்வப்போது மேலெழுந்து உன்னை சுவாசித்தபடி...

முயற்சிக்கிறது...

மஞ்சள் பூசிக்கொண்டது பகலிறுதி வானம்... மலராத மொட்டொன்று முயற்சிக்கிறது நிலவாக...

இரவிலென்ன செய்கின்றன...

நீ இல்லாத பொழுதுகளில் நீ விட்டுச்சென்ற இடத்தை இட்டுநிரப்ப உன் நினைவுகளே போதுமானது... இரவிலென்ன செய்கின்றன இந்தக் கனவுகள்...

விதைநெல்லை...

புழுங்கிய நெல்லின் வாசம் சுமக்கும் பழைய நெற்குதிரின் உடைந்த சில்லொன்றில் தேங்கிய மழைநீர் தேடிப்பார்க்கிறது விதைநெல்லை...

இடம் மாறுகின்றன இரவில்...

ஒரு குமிழிலிருந்து மறு குமிழுக்குள் விழுகின்ற மணற்துகள்களென உன் நினைவுகள் மனக்கடிகையில் பகல் நிரப்ப கனவுகளாக இடம் மாறுகின்றன இரவில்...

வாழ்க்கை...

வண்டி நிறைக்கும் பொதிகளென கவலைகள்... முனகி இழுக்கும் மாடாக நான்... மெல்ல உருள்கிறது வாழ்க்கை...

சிதறுகின்றன கனவுகள்...

மனம் வருடும் மயிலிறகாய் உன் நினைவுகள்... சிலிர்க்கும்போது சிதறுகின்றன கனவுகள்...

அலைகளில் உப்பில்லை...

நீ கரையில் நிற்கிறாய்... உன் கால்கள் தழுவியபின் கடல்திரும்பும் அலைகளில் உப்பில்லை...

கனவுகளையே...

உனக்கும் எனக்கும் இடையே திரையென விழுகிறது இரவு... கள்ளத்தனமாக திரைவிலக்கும் நினைவுகள் காண்பதெல்லாம் கனவுகளையே...

அவன் தமிழே கருவி...

அறம் சீறும்போது நடுவானின் பரிதி... அகம் உரைக்கும்போது பெருவானில் குருவி... தமிழெடுத்து நிற்கும்போது தடதடக்கும் அருவி... தடுமாறும்போது நான் நிற்க அவன் தமிழே கருவி... நா.மு க்காக

அனிச்சையாய்...

உன் விரல்களின் தொடுதலுக்கு ஏங்கும் என் விரல்கள் அனிச்சையாய் நீள்கின்றன தூறல்களுக்குள்...

கனவுகளுக்குள்ளும்...

ஆழியின் அடியாழத்தில் அழுத்தத்தையும் அடர்இருளையும் தாங்கி நிற்கும் தரையென இருக்கிறேன் உன் நினைவுகளுக்குள்ளும் கனவுகளுக்குள்ளும்...

மூங்கிலை மட்டுமா...

முற்றிய மூங்கில்கள் உரசிக்கொள்ள பற்றிக்கொண்டு திகுதி்குவென எரியும் தீ மூங்கிலை மட்டுமா தின்கிறது...

மழை நின்றபிறகும்...

துளித்துளியாய் விழும் நீரை தளிர்க்கரங்களில் ஏந்தி இரட்டைப்பல் மிளிரும் சிரிப்பை இன்னும் கொஞ்சநேரம் பார்க்க மழை நின்றபிறகும் சொட்டுகிறது கூரை...

சாரைசாரையாய்...

முன்னெறும்பின் வாசம் தொடரும் பின்னெறும்பென உன் நினைவுகளைத் தொடர்கின்றன கனவுகள்... இரவெங்கும் சாரைசாரையாய்...

பாறைகள் அறியாமலே...

நெடுங்காலமாய் நீரோடிய பாறைகளில் பள்ளங்கள்... பாறைகள் அறியாமலே...

என் இரவுகள்...

சட்டை உரித்த கருஞ்சாரையென மினுமினுக்கும் உன் நினைவுகளின் முன்பாக தவளைகளாகின்றன என் இரவுகள்...

மூழ்கியே கிடப்பதில்லை...

நிறைகடல் பரப்பின் திரைகளுக்கு மேலே துள்ளுகின்ற மீன்கள் வட்டமிடும் பறவைகளுக்கு அஞ்சி மூழ்கியே கிடப்பதில்லை...

இரவு மட்டுமே...

இதோ உன் நினைவுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்... தனிமையில் நான் புலம்புவதாக ஐயம் கொள்ளாதது இரவு மட்டுமே...

தெரியவில்லை...

நிறைந்து ஓடிய நதியொன்றைக் கொன்ற பின்... வெண்மணல் பரப்பள்ளி விற்று விற்று தின்ற பின்... பாழும் பள்ளங்களில் குப்பைகள் மேவிய பின்... ஏதோ ஒருநாளில் மீண்டும் உயிர்க்கும் நதி... அள்ளிப் பருகத்தான் ஆட்கள் இருப்பார்களா தெரியவில்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சம் கொஞ்சமாய் உயிரள்ளிப் பருகிவிட்டு உன் நினைவுகளை நிரப்பிச் செல்கிறாய்...

தரைதொடும்போது...

காற்றின் போக்கில் கண்டபடி பறக்கும் நூலறுந்த பட்டம் குப்பையாகிறது தரைதொடும்போது...

காற்றெங்கும் பரவுகின்றன

என் இரவின் கதவுகள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன... உட்புகும் உன் நினைவுகள் உறங்கும் கனவுகளை உசுப்பிவிட காற்றெங்கும் பரவுகின்றன கனவுகள்...

உனக்கெங்கே தெரியப்போகிறது

நினைவுகளைத் தந்துவிட்டு நீ சென்றுவிடுகிறாய்... உனக்கெங்கே தெரியப்போகிறது அவை என் உறக்கத்தின்மேல் ஓடி விளையாடுவது...

மெய் மட்டும்

ஞாயிறு சரியும்போதும் நீளும் நிழல்களென ஆசைகள்... அந்திக்குப் பின் ஞாயிறுமில்லை நிழலுமில்லை... மெய் மட்டும் மெய்யாய்...

உணராமல்...

என் நினைவுகளை மறைப்பதற்கு ஏதேதோ நினைவுகளை எடுத்து உடுத்துகிறாய்... துகிலல்ல என் நினைவுகள் உயிரென்பதை உணராமல்...

பெருங்காடு...

புதைந்து கிடக்கும் ஒவ்வொரு விதையின் கனவுகளிலும் நிறைந்திருக்கிறது பெருங்காடு...

கனவுப்போர்வை

பொருளற்ற அச்சங்களால் உன்னை ஏன் போர்த்திக் கொள்கிறாய்... நினைவுப்பூக்களால் நெய்த கனவுப்போர்வை இருக்கும்போது...

திறந்த இரவு...

சாயும் பொழுதுக்கு சற்றுப் பிந்திய சிறுபறவைக்கு கூடாகிறது திறந்த இரவு...

ஆழிக்குள்ளேயே...

ஆழியென அடர்ந்திருக்கும் உன் நினைவுகள் அடுக்கடுக்காய் வீசுகின்ற அலைகளென கனவுகள்... இரவுக்கரை தொட்டு மீள்கின்றன ஆழிக்குள்ளேயே...

ஒளிக்கீற்று...

புலர்காலைப் பொழுதில் புள்ளிகளின்றி கோலமிடுகிறது ஒளிக்கீற்று...

கனவுகள்...

எல்லைகளின்றி விரிந்த வானை இறக்கைகள் விரித்து அளக்கப் பறக்கும் பறவைக் கூட்டமென உன் நினைவுகளில் சிறகடிக்கின்றன கனவுகள்...

சுவாசிக்கிறேன்...

பிறந்ததிலிருந்து பெருங்கடலிலேயே வாழ்ந்தாலும் காற்றுக்கென மேலெழும்பும் திமிங்கலம்போல சூழல்தாண்டி சுவாசிக்கிறேன் உன் நினைவுகளை...

கதிரும் நிலவும்...

கதிரும் நிலவும் ஒளிர்கின்றன... ஒப்பனைகளேதும் இல்லாமல்...

கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சமாய் நீ பேசிய வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து நிரப்புகிறேன் என் மௌனங்களில்...

பேரன்பின் ஊற்று...

ஆறாச்சினமும் தீராவெறுப்பும் அடர்ந்துகிடக்கும் குப்பைகளை தூர்வாரி தூர எறிய சுரக்கும் பேரன்பின் ஊற்று...

உன் வாசம்...

தூரத்தில் பெய்யும் மழை காற்றில் தூவுகின்ற மண் வாசமென உன் வாசம் தூவுகிறாய் நெஞ்சில்...

நெருப்பு...

முகத்தில் உமிழப்பட்ட வெறுப்பின் மேல் அன்பை அள்ளிப்பூச அணைகிறது நெருப்பு...

வாடிவாசல்...

திமிரும் திமில்கள்... திமிலணைக்க துடித்திடும் தினவெடுத்த தோள்கள்... நெஞ்சுகீற பார்த்திருக்கும் கொம்புகள்... கொம்பின் சுழற்சியைக் கணிக்கும் கூர்விழிகள்... கயிறுகாணா மூக்கின் கனத்த சீற்றம்... அதை சுவாசிக்க விரிந்து நிற்கும் ஏறுதழுவும் முற்றம்... திறக்கக் காத்திருக்கிறது வாடிவாசல்...

நட்புக்கு நன்றி...

கிழிக்கும் முட்களுக்கு நடுவில் சிரிக்கும் மலர்போல சில மணித்துளிகள்... நட்புக்கு நன்றி...

ஏன்...

இருளுக்குள் விழுந்த ஒளிபோல என்னை ஏன் நீ விழுங்குகிறாய்... ஒளிக்குள் விழுந்த இருளென உன்னில் ஏன் நான் கரைகிறேன்...

விடியல்...

இருளின் துளிகளில் நனைந்த இரவு மெல்ல உலர விடிகிறது வெள்ளையாக...