நீரில் மிதக்கும் பனிப்பாறையென மிதக்கிறேன் உன் நினைவுகளில்... சிறுகச் சிறுக உருகுகிறேன் உன் நினைவுகளின் வெப்பத்தில்... உருக உருக கரைகிறேன் உன் நினைவுகளின் வெள்ளத்தில்...
பாறையிடுக்கில் தேங்கும் நீர்போல உன் மனதில் தேங்குகிறேன்... நீ இறுக்கமாகவே இரு... மழையெனப் பொழிந்து வெயிலெனக் காய்ந்து பனியெனப் பெய்யும் என் நினைவுகள் விரிசல்கள் செய்யும்வரை நீ இறுக்கமாகவே இரு..
கடந்த நொடியெனவே காலம் காட்டுகிறது ஆண்டுகள் ஐந்து அடங்கிய பின்னரும்... இன்றைக்கும் உறங்கியெழும் வேளையில் உங்கள் குரலே செவி தட்டுகிறது... ஊரடங்கி உறங்கச் செல்லும் வேளையிலும் உங்கள் விரல்களே தலை வருடுகிறது... அப்பா... எப்போதும் அளவில்லா அன்பின் உச்சாணி... இப்போதும் எங்கள் வாழ்வின் அச்சாணி...
சுழியத்தில் தொடங்கி முடிவிலியாக நீளும் இயலெண்களப் போலவே உன் நினைவுகளும்... எண்களை எண்ணால் வகுத்தேன் ஈவும் மீதமுமாக எண்ணே வந்தது... உன் நினைவுகளை என்னால் வகுத்தேன் ஈவும் நீ மீதமும் நீ...
வாடிவாசல் கடந்து வால் சுழற்றி சினம் தெறிக்க சீறிவரும் காளைகளின் கூர்கொம்பு தாண்டி திமிலணைக்கக் குவிந்திருக்கும் கூட்டத்தில் செறிந்திருக்கிறது தமிழ்த் திமிர்... #என்றும் வீழோம்👍🏻
நோவாவின் பேழையாகிறது மனது... முழுவதுமாக உன் நினைவுகளைச் சுமந்தபடி... பேரூழிக்காலத்திற்கு பின்னரும் பேழை இருக்கும்... புதிய உலகிலும் உன் நினைவுகளையே சுமந்துகொண்டு...