இப்போதெல்லாம் அரிதாகவே புன்னகைக்கிறாய் நீ... பாலைவனத்தின் நீர்ச்சுனை போல... ஒட்டகம் போல உள்ளிழுக்கிறேன் நான்... அடுத்த சுனை அருகிலிருக்க வேண்டிக்கொண்டு..
உன் நினைவுகள் சுற்றித் திரிகின்றன பட்டாம்பூச்சிகளின் கூட்டம்போல... இறக்கைகளின் ஒவ்வொரு அசைவிலும் நிறங்கள் உதிர வண்ணங்களின் கலவையாகிறது இரவு... என் கண்கள் விழிக்கும்வரை...
என் இரவுகளை எடுத்து மைதீட்டுகிறாய்... என் பகல்களை எடுத்து முகம் ஒற்றுகிறாய்... நாட்களையெல்லாம் நீ எடுத்துக்கொண்டபின் நானெப்படி அகவைகளைக் கடப்பது... உன்னைப் பார்த்த நாளில்தான் நிற்கிறேன் இப்போதும்...