Posts

இரவு...

இரைக்கு மேலே பறக்கும் ஆந்தையின் கண்களென இருளுக்குள் விரிகிறது இரவு...

வாழ்க்கை...

காற்றில் மிதந்து கலவையான வண்ணங்கள் காட்டி கவனிக்கும் முன் காணாமல் போகும் வழலைக் குமிழென உடையும் விருப்பங்களின் ஊடாக நகர்கிறது வாழ்க்கை...

காற்றாகவே...

காற்றாகவே நான் இருக்கிறேன்... இசை தேடுபவர்கள் புல்லாங்குழலுக்குள் திணிக்கிறார்கள் என்னை...

வலி...

நொறுங்கிச் சிதறிய நம்பிக்கைகளின் மேல் நடந்து செல்லும் மனதின் காயங்களில் வழிகிறது வலி...

இனிப்பு...

அத்தனை அடிமைகளிடமிருந்தும் எடுக்கப்படுகிறது இனிப்பு... புத்திசாலி பூவாகிறான் அடிமுட்டாள் கரும்பாகிறான்...

வாழ்க்கை...

தொலைந்து போன கனவுகளைத் தேடும் தொலையாத நினைவுகளின் துரத்தல்களுக்கு நடுவே ஓடுகிறது வாழ்க்கை...

கனவுகள்...

உயிரற்ற ஈசல்களின் உடல்களென நிலத்தில் நினைவுகள் விழுந்தபின்னும் உயரப் பறக்கும் இறகுகளென உறக்கத்தில் பறக்கின்றன கனவுகள்...